சென்னை: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 25 முதல் மே 2ம் தேதி வரை மாவட்ட அளவில் நீட் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவு: நீட் பயிற்சி பெற விரும்பும் மாணவ மாணவியருக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் மாலையில் தேநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படும் பயிற்சி மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளுக்கு மாணவ மாணவியர் வந்து செல்ல பேருந்து கட்டணம் வழங்கப்படும். நீட் தேர்வு எழுத ஏற்கெனவே பள்ளியளவில் அளிக்கப்பட்ட பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியரும் தற்போதைய பயிற்சிக்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பிளஸ் 2 தேர்வு முடிந்த பிறகு மார்ச் 25ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை நீட் தேர்வு சார்ந்த பயிற்சிகளும், தேர்வுகளும் கல்வி மாவட்ட அளவில் நடத்தப்பட வேண்டும். ஒரு கல்வி மாவட்டதுக்கு அதிகபட்சம் 2 பயிற்சி மையங்கள் அமைக்க வேண்டும். ஒரு மையத்தில் 40 மாணவர்கள் வீதம் மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ளலாம். இணைய தள வசதி மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் வசதியுடைய பள்ளிகளை பயிற்சி மையங்களாக தேர்வு செய்ய வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிற்சி மற்றும் தேர்வு நடத்த வேண்டும். பயிற்சி மையங்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலை 9.15 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணி வரை செயல்படும். பயிற்சியின் இறுதியில் 3 திருப்புதல் தேர்வுகள் நடத்த வேண்டும்.
The post அரசு – அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 25 முதல் நீட் பயிற்சி: பள்ளி கல்வித்துறை உத்தரவு appeared first on Dinakaran.